குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் வீடுகளின் மேல் விழுந்ததால் வீடுகளில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விமான விபத்து குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய அவர் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தார்.
மேகனிநகர் பகுதிக்கு அருகிலுள்ள தார்பூரில் இருந்து கடும் புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளிக்கிறது. தீயணைப்பு படையினரும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், அவசரகால மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி லண்டன் செல்லும் விமானத்தில் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் கதி என்ன என்பதும் தெரியவில்லை.