இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பயணிகள் சேவை செய்யும் அமைப்பாக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கும் இந்திய ரயில்வே, தனது சேவைகளை மேம்படுத்தி அதில் உள்ள பிரச்சனைகளை களைய தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு சிறப்பான சேவைகளை வழங்க ரயில்வே நிர்வாகம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, இரவு நேர பயணத்தில் ஈடுபடும் பணிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய உத்தரவுகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் ரயில் பணிகள் பெட்டிகளுக்குள் சத்தமாக போன் பேசுவது, செல்போனில் சத்தமாக பாடல் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இரவு விளக்கு வெளிச்சத்தை தவிர மற்ற விளக்குகள் மற்றும் செல்போன் வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி சக பயணிகளின் தூக்கத்தை கெடுக்கக் கூடாது. இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது. மீறி செயல்பட்டு அது தொடர்பான புகார் ரயில்வே நிர்வாகத்திற்கு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், ரயில்வேயில் பணிபுரியும் சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மின்சாதன பராமரிப்பாளர்கள், உணவு பிரிவு ஊழியர்கள், இன்னும் பிற சேவை மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் சத்தமின்றி பயணிகளுக்கு தொல்லை தராமல் வேலை செய்வார்கள். அதேபோல், இரவு நேரங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு தேவையான சில உதவிகளை செய்ய ரயில்வே ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். இந்த விதிகளை அனைத்து மண்டலங்களும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். பயணிகள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டும்”. இவ்வாறு இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.