சின்ன சின்ன பூச்சிகள், கொசுக்கள், தேனீக்கள், தேள், பூரான் உள்ளிட்ட பூச்சிக்கடிகள் எல்லோருக்குமே அவ்வப்போது உண்டாகும். இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருள்களை வைத்து அந்த பூச்சிக்கடியால் ஏற்படும் சருமப் பிரச்சினைகளையும் விஷத்தன்மை தாக்கத்தையும் குறைத்துக் கொண்டு அதன்பின் மருத்துவமனைக்குச் செல்லலாம்.
முதலில் ஒரு சின்ன வெங்காயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைக்க வேண்டும். பின்னர் அதை பூச்சிக்கடிப்பட்ட இடத்தில் தவடவினால் அந்த வழியும் அரிப்பும் உடனே குணமாகும்.
தேனீ கொட்டியதற்கு தேன் கொண்டு முதலுதவி செய்வது ஒரு சிறந்த தீர்வாகும். தேன், நஞ்சை நீர்த்து போக உதவுகிறது. மேலும் இது தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தேனின் இதமான தன்மையானது பாதிப்பு உண்டாக்கும் ஆபத்துகளைப் விரைவாகப் போக்க உதவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட இடத்தில், சிறிதளவு தேனை பயன்படுத்தி தடவி விடவும்.
குளவி கடித்தால் அதன் விஷமானது ஊடுருவாமல் உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியமாகும். பொதுவாகவே விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும் தன்மை பேக்கிங் சோடாவில் அதிகம் இருக்கிறது. அதோடு இது வலி, வீக்கம், சருமம் சிவத்தல், அரிப்பு போன்றவற்றையும் எளிதில் கட்டுப்படுத்தும். பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து குழைத்து குளவி கொட்டிய இடத்தில் பூசலாம். மேலும், குளவியின் விஷத்தன்மையை உடலிலிருந்து நீக்குவதற்கு வினிகரை சிறிதளவு தண்ணீரில் கலந்து குளவி கொட்டிய இடத்தில் தடவலாம்.
பொதுவாகவே பூரான் கடித்த இடத்தில் தடிப்பு ஏற்படும். பின்னர் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படும். சொரியும் பொழுது புண் ஏற்பட்டால் விஷம் அதிகமாக பரவியுள்ளது என்பதைக் கண்டறியலாம். பூரான் கடித்த இடத்தில் அதிகமாக அரிப்பு இருக்கும் இடங்களில் மண்ணெண்ணெய் விட்டு நன்றாக தேய்த்தால் தடிப்புகள் மறையக்கூடும்.
பெருச்சாளிக் கடித்த இடத்தில் மஞ்சள், உப்பு, மிளகு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நன்றாக அரைத்து கடித்த இடத்தில் பத்தாகப் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் பெருச்சாளியின் விஷம் உடலில் ஊடுருவாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.