கேரள மாநிலம் கண்ணூர் அருகே திருமணமான பெண்ணை படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கண்ணூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்), கே.வி.சீமா என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சீமா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியானது.
விசாரணையில், சீமா தனது காதலரான விஜயன் என்பவருடன் அந்த விடுதிக்கு வந்துள்ளது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதும், நீண்ட காலமாக இவர்களிடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்ததும் அம்பலமானது. விடுதி அறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த விஜயன், சீமாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், தலைமறைவான விஜயனைத் தேடி வந்த காவல்துறையினர், விடுதிக்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் அவர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை கண்டறிந்தனர். காதலியைக் கொன்ற குற்ற உணர்விலோ அல்லது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவோ அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



