திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகாரளித்திருந்த நிலையில், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் ஆதாரமற்றவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த ஆண் மீது வழக்கை தொடர்வது என்பது “நீதிபதியை நக்கல் செய்வதற்கு சமமானது” எனக் கடுமையாக சாடியுள்ளது.
இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணின் பாலியல் நடத்தை மற்றும் பிடிவாதமான மனநிலை குறித்து அறிந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ஆண், திருமணத்தில் இருந்து விலகியதில் எந்த தவறும் இல்லை. இந்த வழக்கு, ஒரு திருமண தளத்தின் மூலம் பழகி, பின்னர் இந்தியாவுக்கு வந்த அந்த ஆண் மீது, FIR-களை பதிவு செய்திருந்த வழக்காகும்.
“திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தினார்” எனவும், பின்னர் “தன்னை திருமணம் செய்ய மறுத்ததற்கு காரணம், தன்னுடைய சாதி” எனக்கூறி மற்றொரு FIR-ஐ அப்பெண் பதிவு செய்தார். இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளின் சாட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், “உண்மையில் குற்றம் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது பொய்யான வழக்கை அந்தப் பெண் தொடர்ந்திருப்பதாகவும் நீதிபதி குற்றம்சாட்டினார்.
மேலும், அந்தப் பெண் அளித்த புகார்கள் முற்றிலும் பொய்கள் நிறைந்தது. தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கொண்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. புகார் அளித்த பெண் பழிவாங்கும் எண்ணத்தோடு மட்டுமே புகாரளித்துள்ளார். மேலும், அந்த பெண் அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகளை ஆய்வு செய்தபோது, அதில், அவர் “கிரீன் கார்டு வைத்த நபரை பிடிக்க முயற்சித்தேன்” என்று தெரிவித்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே, அதே பெண், திருமண வாக்குறுதியுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பேராசிரியர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், அந்த ஆண் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.