மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுந்தர்.சி. பிறகு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரது திரைப்படங்கள் காமெடி கலந்த திரைக்கதையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அவரது இயக்கத்தில் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்துக்கு முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான மதகஜராஜா, அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்தன. எனவே சுந்தருக்கு கேங்கர்ஸ் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வழக்கமான சுந்தர்.சியின் டெம்ப்ளேட்டில்தான் படம் அமைந்திருந்தது. இருப்பினும் முந்தையை இரண்டு படங்களை ஒப்பிடுகையில் கேங்கர்ஸ் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.
இந்நிலையில் சுந்தர்.சி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கூறுகையில் “நடிகர் சத்யராஜ் பைக்கில் வரும் காட்சியை ஷூட் செய்வதற்காக கேமிராவை நடுரோட்டில் வைத்திருந்தோம். கேமிரா முன்னாடி சாணி இருந்தது. மணிவண்ணன் சார் சாணியை எடுங்கடா என்று சொன்னார். நான் உடனே இன்னொருவரை எடுக்கச் சொன்னேன். அதற்கு ஏன் நீ எடுக்க மாட்டியா என கெட்ட வார்த்தையில் திட்டினார் மணிவண்ணன். அதன்பிறகு நானே சாணியை எடுத்து விட்டேன். சினிமாவில் நான் செய்த முதல் வேலை சாணி அள்ளுனது தான்.
இன்றைக்கு நான் ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க மணிவண்ணன் சார் தான் காரணம். எந்த வேலையும் அவமானம் அல்ல; ஆகையால் எதற்கும் தயங்கக் கூடாது என்பதை நான் முதல் நாளிலேயே கற்றுக் கொண்டேன். முதல் நாள் சினிமா ஷூட்டில் சாணி அள்ளியது, எனக்கு இன்று வரை உதவுகிறது. அனைத்து வேலைகளையும் நாமே இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும் என்பதை நான் மணிவண்ணன் சாரிடம் தான் கற்றுக் கெண்டேன்” எனக் கூறினார்.