மழையின் அளவைப் பொறுத்து பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. விடாது பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு, பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளது.