அமர்நாத் யாத்திரைக்கு ஒரு வாரம் முன்னதாக, இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.
ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் பற்றிய தகவலை பாதுகாப்புப் படையினர் பகிர்ந்து கொண்டனர், இந்த நடவடிக்கை தற்போது பிஹாலி பகுதியில் நடந்து வருவதாகக் கூறினர். எனவே இந்த இடத்தின் பெயரே இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த துப்பாக்கிச்சூடு ஏற்பட்டது.
இதுகுறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “Op BIHALI. குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், பசந்த்ஹரின் பிஹாலி பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையும் யாத்திரை காலத்தில், வரும் நாட்களில் ஏராளமான யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடவடிக்கை
ஏப்ரல் மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7 ஆம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் 9 பயங்கரவாத மையங்களை தாக்கப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பஹல்காம் தாக்குதலை புறக்கணித்த SCO கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு..!!