வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த சமீபத்திய தகவல்படி, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை இன்றிரவு (அக். 22) ஒருநாள் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, காவிரி படுகை மாவட்டங்களில் மழைப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், வட கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று (அக். 22) முதல் வரும் 25-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு நீடிப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், டெல்டாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழைப் பொழிவு, புயல் நகர்வு மாற்றம் காரணமாக தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மையம் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.



