தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது..
10-06-2025 : தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11-06-2025 : வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-06-2025 : வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
13, 14, 15 ஆகிய தேதிகளில் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை : இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை, தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.