பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகிறது. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில் 2022ஆம் ஆண்டில் 91 – 151 நாட்களுக்குள் பணியாற்றிய ஊழியர்களுக்கு 85 ரூபாயும், 151 – 200 நாட்களுக்குள் பணியாற்றிய ஊழியர்களுக்கு 195 ரூபாயும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா 625 ரூபாயும் வழங்கப்படும். முதலமைச்சரின் உத்தரவின்படி 1,17,129 போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.7.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.