தொழில் முனைவோர்களாக விரும்பும் பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்குமே தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில், புதிய குழுக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு சார்பில், குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.
இதற்கு ஆண்டு வட்டி விகிதம் மொத்தமாக 6%ஆக உள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்த இரண்டரை ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த கடனை நீங்கள் பெற வேண்டும் என்றால், சுய உதவிக்குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதேபோல், குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் ரூ.15 லட்சம் குழுக்கடனை பெற 18-60 வரை வயது உடையவராக இருக்க வேண்டும். அதேபோல், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில், தலா ரூ.10 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கருத்துரு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்திட்டத்திற்குத்தான் பெண்களுக்கு மிக குறைந்த வட்டியில், ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்படும். 20% அரசு மானியம் வழங்குவதற்காக, நடப்பாண்டு பட்ஜெட்டில், ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திட்டத்திற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் விண்ணப்பம் பெறப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.