சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் கௌதம் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குணசேகரன் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த குணசேகரன், நேற்று மாலை அடையாறு பகுதியில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அடையாறு பெட்ரோல் நிலையம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குணசேகரனின் காரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன், அந்தக் கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக உடனடியாக காரை விட்டு இறங்கி, அடையாறு பிரதான சாலையை நோக்கி ஓடத் தொடங்கினார்.
ஆனால், அந்தக் கொலைக் கும்பல் அவரை பொதுமக்களுக்கு மத்தியில் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இந்த கொடூரத் தாக்குதலில் குணசேகரனின் முகம் உட்பட உடல் முழுவதும் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கறிஞர் கௌதமின் கொலைக்குப் பழிக்குப் பழியாகவே இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



