கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கொண்டேகவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவருக்குக் கலையரசி என்ற மனைவியும், 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று பூபதி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பூபதியின் தாய் மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து, 17 வயது சிறுமியையும் அவரது பாட்டி மயிலாத்தாளையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனைத் தடுக்க வந்த சிறுமியின் அக்காவுக்கு கத்திக்குத்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பாட்டியையும், பேத்தியையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமியை அந்த வாலிபர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததும், தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறுமியின் குடும்பத்தாரிடம் அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு சிறுமியின் வீட்டார் சம்மதிக்காத நிலையில், இந்த இரட்டைக் கொலையை அவர் அரங்கேற்றியுள்ளார் என கூறப்படுகிறது. மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்துப் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதது காண்போரை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : நிதி நெருக்கடியை தவிர்க்க வேண்டுமா..? செவ்வாய் கிழமை அன்று மறந்தும் கூட இந்த தவறுகளை பண்ணாதீங்க..!!



