வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவருக்கும் சமையல் வேலையைக் குறைக்கும் நண்பன் என்றால் அது இட்லி, தோசை மாவுதான். வார இறுதி நாட்களில் 5 நாட்களுக்கான மாவை அரைத்து ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது பல வீடுகளில் வழக்கமான ஒன்றாகும். சில சமயங்களில், வானிலையில் ஏற்படும் மாற்றம், மாவை அரைக்கும் பக்குவம் அல்லது ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு பழுதுகள் காரணமாக மாவு எதிர்பாராத விதமாக அதிகமாக புளித்துப்போக வாய்ப்புள்ளது. இப்படி மாவு புளித்துவிட்டால், அதை வீணாக்காமல் சுவையை மீட்டெடுக்க உதவும் சில எளிய சமையல் குறிப்புகளைப் பார்ப்போம்.
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் : இட்லி மாவில் லேசான புளிப்புத் தெரிவது போல் இருந்தால், மாவின் அளவிற்கு ஏற்ப சிறிதளவு இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக மைய அரைத்து மாவுடன் கலந்துவிடலாம். இதனால் புளிப்புத் தன்மை நீங்குவதுடன், மாவில் ஒரு தனித்துவமான சுவையும் மணமும் கூடும்.
சர்க்கரை அல்லது வெல்லம் : புளிப்புச் சுவையையும், வாசனையையும் குறைப்பதற்கு இது ஒரு எளிய தீர்வு. புளித்த மாவில் ஒரு துண்டு வெல்லம் அல்லது சிறிது சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கலாம். மாவின் அளவிற்கு ஏற்ப இவற்றைக் கலந்து பயன்படுத்தும்போது, புளிப்புச் சுவை மட்டுப்படும், அத்துடன் அதன் சுவையிலும் பெரிய மாற்றம் இருக்காது.
அரிசி மாவு அல்லது ரவை : மாவு மிகவும் புளித்துவிட்டால், ஒரு கப் அரிசி மாவை அல்லது ரவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பாருங்கள். இது மாவின் புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், தோசை சுட்டால் அது முறுவலாகவும், இட்லி சற்று மென்மையாகவும் கிடைக்கும். ரவை சேர்ப்பதால் தோசை கூடுதல் ருசியாக இருக்கும்.
புதிய மாவு : புளித்துப்போன மாவுடன், புதிதாக அரைத்த அல்லது புளிக்காத இட்லி மாவு சிறிதளவைக் கலந்து பயன்படுத்தினால், புளிப்புத் தன்மை நீங்கி, இட்லியும் தோசையும் மிருதுவாகவும் (Soft) சுவையாகவும் வரும். இந்த எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி, புளித்துப்போன மாவை வீணாக்காமல் சுவையான இட்லி, தோசைகளைச் செய்து மகிழலாம்.