நேற்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த நவம்பர் மாதம் புனேவில் 67 வயது நபருக்கு ஜிகா வைரஸ் கண்டறிந்து சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முதன்முதலில் 1947ம் ஆண்டு உகாண்டாவில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு ஆசியா மற்றம் பசிபிக் தீவுகளில் உள்ள பகுதிகளில் ஜிகா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டது. பிறகு, 2016ம் ஆண்டு பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பொது சுகாதார நோய்களில் வீரியம் மிக்க வைரஸாக ஜிகா வைரஸ் என தெரிவித்தனர்.
ஜிகா வைரஸ் பரவுவது எப்படி: உலக சுகாதார அமைப்பு (WHO) படி, ஜிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றையும் பரப்பும். இரத்த பரிசோதனை அல்லது மற்ற உடல் திரவங்களை உள்ளடக்கிய சோதனைகள் மூலம் Zika வைரஸ் கண்டறியப்படுகிறது. ஜிகா வைரஸுக்கு இன்னும் குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்: லேசான காய்ச்சல், சொறி, வெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு மற்றும் தலைவலி ஆகியவை நோயின் பொதுவான அறிகுறிகளாகும். அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜிகா வைரஸ் உள்ள பெரும்பாலான மக்கள் அறிகுறிகளை உருவாக்கவில்லை என்று கூறுகின்றனர்.