நடிகர் மம்மூட்டியின் உடல் நிலை குறித்து ராஜ்யசபா எம்.பியும், மம்மூட்டியின் நீண்டகால நண்பருமான ஜான் பிரிட்டாஸ் பேசி உள்ளார்.
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக ஒரு தகவல் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்திய நிலையில் அவரின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் இந்த வதந்திகளை மறுத்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது ராஜ்யசபா எம்.பியும், மம்மூட்டியின் நீண்டகால நண்பருமான ஜான் பிரிட்டாஸ் மம்மூட்டியின் உடல்நிலை குறித்து பேசி உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த விஷயத்தைப் பற்றி பேசினார். மம்மூட்டி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு எந்த தீவிர நோய் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் “மம்மூட்டி ஒரு சிறிய உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக உள்ளார், நான் அவருடன் ஒரு தொலைபேசியில் பேசினேன்.” என்று தெரிவித்தார்.
“நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தபோதிலும், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசும் நபர்கள் நாங்கள் ஒருபோதும் இல்லை. இருப்பினும், சமீபத்திய நாட்களில், இதுபோன்ற விவரங்களையும் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம்,” என்று கூறினார். இதனால் மம்மூட்டி நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்குத் திரும்புவார் என்றும் அறிந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மம்மூட்டியின் குழுவினரும் ஆதாரமற்ற புற்றுநோய் வதந்திகளுக்கு உடனடியாக பதிலளித்தனர். ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இது போலி செய்தி. அவர் ரம்ஜான் நோன்பு நோற்பதால் விடுமுறையில் இருக்கிறார். அதனால்தான் அவர் தனது படப்பிடிப்பு அட்டவணையிலிருந்தும் ஓய்வு எடுத்துள்ளார். உண்மையில், இடைவேளைக்குப் பிறகு, மோகன்லாலுடன் மகேஷ் நாராயணனின் படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்புவார்” என்று ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது..
மம்மூட்டி கடைசியாக டீனோ டென்னிஸ் இயக்கிய பசூகா என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார்.. அதிக எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், படம் மந்தமான வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் மோசமான வரவேற்பை பெற்றது. இருப்பினும், இந்த படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மேலும் மம்மூட்டி ‘கலாம்காவல்’ என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் தற்காலிகமாக ‘MMMN’ (பேட்ரியாட்) என்று பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட படத்திலும் நடிக்கத் தயாராகி வருகிறார். இந்த ஆக்ஷன் த்ரில்லரில் மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடிக்கின்றனர்.
Read More : கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவு.. தடையாக இருப்பவர்கள் மீது வழக்கு தொடரவும் ஆணை..