நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது தீப வழிபாடாகும். முறையான பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் தெரியாதவர்கள் கூட, காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் விளக்கேற்றி, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; வீட்டில் உள்ள தீய சக்திகள் யாவும் விலகி, மகாலட்சுமியின் அருள் முழுமையாக ஸித்திக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அத்தகைய தீப வழிபாட்டைச் சிறப்பிக்கும் மாதமே திருக்கார்த்திகை மாதம். இம்மாதத்தில் வீடுகளில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது.
குறைந்தபட்சம் 3 நாட்கள் அவசியம் :
கார்த்திகை மாதம் முழுவதும் நம்மால் விளக்கேற்றி வழிபட முடிந்தால் அது மிகவும் சிறப்பு. அவ்வாறு வாய்ப்பில்லாதவர்கள், குறைந்தபட்சம் 3 நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிக அவசியம். முதல் நாள் பரணி தீபம், அடுத்த நாள் கார்த்திகை தீபம், அதற்கு மறு நாள். இந்த நாட்களில் கட்டாயம் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
27 தீபங்கள் ஏற்ற வேண்டிய இடங்கள் :
கார்த்திகை மாதத்தில் நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த 27 என்ற எண், 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.
இடம் மற்றும் விளக்குகளின் எண்ணிக்கை :
வீட்டு முற்றம் (முன்புறம்) – 4 விளக்குகள்
சமையல் அறை – 1 விளக்கு
நடையிடம் (Hallway/Passage) – 2 விளக்குகள்
வீட்டின் பின்புறம் – 4 விளக்குகள்
திண்ணை – 4 விளக்குகள்
மாடக்குழி – 2 விளக்குகள்
நிலைப்படி (வாசற்படி) – 2 விளக்குகள்
பூஜை அறை – 2 விளக்குகள்
வெளியே (யம தீபம்) – 1 விளக்கு
திருக்கோலம் இட்ட இடம் – 5 விளக்குகள்
தற்காலத்தில் அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகளில் குடியிருப்போர் மேற்சொன்ன முறையில் விளக்கு ஏற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, வசதிக்கு ஏற்றவாறு வீட்டுக்குள்ளும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றி வைக்கலாம். 27 விளக்குகளும் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தபட்சம் 9 விளக்குகளாவது கட்டாயம் ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் ஏற்ற முடியாவிட்டால் கூட, நிலை வாசல் மற்றும் பூஜை அறையில் கண்டிப்பாக இரண்டு விளக்குகளாவது ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற மிகவும் உகந்த நேரம் :
அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும், அதேபோல், பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் தீபம் ஏற்றலாம். இந்த நேரம் சிவபெருமானுக்கும் நரசிம்ம மூர்த்திக்கும் உகந்தது. இந்த வேளையில் தீபம் ஏற்றினால் திருமணத் தடை, கல்வித் தடை ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை.
விளக்கு ஏற்ற களி மண்ணாலான விளக்கை, பஞ்சு திரியிட்டு, பசு நெய்யைக் கொண்டு தீபமேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது. தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு மாற்றாகப் பசு சாணத்தையும் பயன்படுத்தலாம். இந்தச் சுத்தமான வழிமுறைகளைப் பின்பற்றி கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதால், வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
Read More : செக்..! இனி தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்…! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!



