நடிகர் சிம்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “இரவில் தூங்க செல்லும்போது லேசான பசியோடு தூங்கச் செல்வது அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பழக்கம் குறித்து நிபுணர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள், இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
வயிறு முட்ட சாப்பிட்டால் என்ன ஆகும்..?
இரவு நேரத்தில் வயிறு நிரம்பச் சாப்பிடும்போது, நமது உடலின் வளர்சிதை மாற்றங்கள் மெதுவாகச் செயல்படத் தொடங்கும். இதனால், உடலில் சேரும் கொழுப்புச்சத்து முறையாக எரிக்கப்படாமல் போகிறது. இந்தச் செயல்முறைகள் அனைத்தும் நமது தூக்கத்தின் தரத்தைப் பாதிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கச் செய்கின்றன.
குறிப்பாக, இரவில் நாம் துரித உணவுகளையோ அல்லது அதிக கலோரிகள் கொண்ட ஹெவியான உணவுகளையோ உட்கொள்ளும்போது, கிரெலின் என்ற பசிக்கான ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாகும்போது, நம்மையே அறியாமல் நாம் அதிகமாகச் சாப்பிடத் தூண்டப்படுவோம். இதன் விளைவுதான் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியச் சிக்கல்களாக மாறுகின்றன. இந்தச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத்தான், நிபுணர்கள் இரவில் லேசான பசியோடு படுக்கைக்குச் செல்லப் பரிந்துரைக்கின்றனர்.
பசியை கட்டுப்படுத்த வழி :
‘லேசான பசியோடு தூங்கச் செல்லுங்கள்’ என்று கூறும்போது, இரவில் வயிறு நிறையச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு அது கடினமாக இருக்கலாம். அப்படியானவர்கள், தங்கள் இரவு உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்த முடியும். அதே நேரத்தில், கொழுப்புச்சத்து குறைவான உணவுகளை உட்கொள்வது, கலோரி உட்கொள்ளலை குறைத்து, உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கும்.
பசி உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, கலோரி எரிப்பு எளிதாகும் போது, ரத்த சர்க்கரை அளவு இயற்கையாகவே கட்டுக்குள் வரும். இதனால் வளர்சிதை மாற்றங்கள் சீராக இயங்கி, செரிமானம் மேம்படும். இரவில் இப்படி புத்திசாலித்தனமாகச் சாப்பிடும்போது, நம்மால் உடல் எடையை மிக எளிதாக கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
சிம்பு தனது பேட்டியின்போது வலியுறுத்திய மற்றொரு முக்கிய விஷயம், “உணவுக்கும் தூக்கத்திற்கும் இடையே குறைந்தது 3 மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்” என்பதுதான். இரவு உணவை முடிந்தவரை 7 முதல் 8 மணிக்குள் முடித்துக் கொள்வது சிறந்தது. அப்போதுதான் அடுத்த ஓரிரு மணி நேரம் நாம் சுறுசுறுப்பாக இருந்துவிட்டு, அடுத்த பசி வருவதற்குள் படுக்கைக்கு செல்ல முடியும்.
இப்படி 2 முதல் 3 மணி நேரம் கழித்து உறங்க செல்வது, தூக்க வரைமுறையை சீராக்குவதோடு, எடைக்கட்டுப்பாட்டிலும் ஏராளமான நன்மைகளை தருவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சாப்பிட்ட உடனேயே படுக்கைக்கு செல்லாமல், சில நிமிடங்கள் நடப்பது ஆரோக்கியத்திற்கு இன்னும் நல்லது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : மார்கழி மாதத்தில் ஏன் சுப காரியங்கள் செய்யக் கூடாது தெரியுமா..? மீறி நடந்தால் என்ன ஆகும்..?



