பசுவின் கோமியம் மனிதர்களின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.. தொற்றுநோயியல் துறையின் தலைவராக பணியாற்றும் போஜ் ராஜ் சிங் தலைமையில் பசு மற்றும் எருமை ஆகியவற்றின் கோமியங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. அதில் “ பசு மற்றும் எருமை கோமியங்களில் மனிதர்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன.. இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு சென்றால் வயிற்றில் தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.. எனவே மனிதர்கள் கோமியத்தை நேரடியாக உட்கொள்வது உடல்நலனுக்கு உகந்தது அல்ல..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
போஜ்ராஜ் சிங், ஜூன் 2022 முதல் நவம்பர் 2022 வரை தனது மூன்று பிஎச்டி மாணவர்களுடன் சேர்ந்து உள்ளூர் பால் பண்ணைகளில் இருந்து சாஹிவால், தார்பார்கர் மற்றும் விந்தவானி ஆகிய மூன்று வகையான பசுக்களில் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மனிதர்கள் மற்றும் எருமைகளின் மாதிரிகள் கூட ஆய்வுக்கு பரிசீலிக்கப்பட்டன.
இதற்கிடையில், தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஆர்.எஸ். சவுகான் இந்த ஆய்வு குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “நான் 25 ஆண்டுகளாக பசுவின் கோமியத்தை ஆராய்ச்சி செய்து வருகிறேன், காய்ச்சி வடிகட்டிய மாட்டு கோமியம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் கோவிட்க்கு எதிராக உதவுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ஆராய்ச்சி காய்ச்சி வடிகட்டிய கோமியம் மாதிரிகளில் செய்யப்படவில்லை..” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் பசுவின் கோமியம் பரவலாக விற்கப்படுகிறது. இந்து மதத்தில் பசுக்களும் அவற்றில் இருந்து வரும் பொருட்களும் புனிதமாக கருதப்படுவதால் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவை தடையின்றி நடைபெறுகிறது.. எனினும் பசு கோமியத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…