பெற்ற மகளை கரும்பு காட்டுக்குள் 3 நாட்கள் கட்டி போட்டு உணவு தராமல் நரபலி கொடுத்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவேஷ் அக்பரி. இவருக்கு தாரியா (14) என்ற மகள் இருந்தார். இவர் சூரத் பகுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பவேஷ் பெரும் பண நெருக்கடியில் இருந்துள்ளார். இதனால், கடன் மற்றும் வீட்டு பிரச்சனைகளை தீர்க்க பவேஷுக்கு அவரது மூத்த சகோதரர் திலீப் விபரீத யோசனை ஒன்றை கூறியுள்ளார். குழந்தை தாரியாவுக்கு பேய் பிடித்துள்ளதால் தான் குடும்பத்தில் இதுபோன்ற பிரச்சனை உள்ளது. எனவே, தாரியாவுக்கு தந்திரீக பூஜை செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட தந்தை பவேஷ், சிறுமியின் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் கடந்த 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஆறு நாட்கள் விதவிதமான முறையில் பூஜை சடங்கு என்ற பெயரில் சிறுமிக்கு கொடுமைகள் செய்துள்ளனர். பழைய கந்தல் துணிகளை கொடுத்து அதை போட சொல்லி இரண்டு மணிநேரம் நெருப்பின் முன் நிற்க வைத்து வாட்டியுள்ளனர். பின்னர், கம்புகளை வைத்து அடித்து பேய் ஓட்டுவதாக தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள கரும்பு காட்டிற்குள் அழைத்துச் சென்று நாற்காலி ஒன்றில் கட்டிபோட்டு 3 நாட்கள் உணவு தராமல் பட்டினி போட்டுள்ளனர். தாரியாவின் சத்தம் வரக்கூடாது என வாய் மற்றும் கண்களையும் சேர்த்து கட்டியுள்ளனர். இவ்வாறு 3 நாட்கள் சென்ற நிலையில், பட்டினியால் கடந்த 7ஆம் தேதி அன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்ததும், உடலை எடுத்து அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் தந்தை பவேஷ், பெரியப்பா திலீப் எரித்துள்ளனர்.

இத்தனை சம்பவங்கள் நடந்த பின்னர் தான் சூரத்தில் வசிக்கும் சிறுமியின் தாய் வீட்டாருக்கு மகள் உயிரிழந்த கதையை பவேஷ் கூறியுள்ளார். தாய் வழி தாத்தா வால்ஜீபாய் என்பவருக்கு மரணம் தொடர்பாக சந்தேகம் வர, இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிசிடிவிக்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில், இந்த உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது.