சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் 28 வயதான அன்பு கணபதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜதுரை என்பவரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடும் சண்டை நடந்துள்ளது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில், இனி மதுவுடன் பேசக் கூடாது என அன்பு கணபதியை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, ராஜதுரை தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தில் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இதற்கு அன்பு கணபதிதான் காரணம் என ராஜதுரை நினைத்துள்ளார். இதையடுத்து, அவரை தீர்த்துக் கட்டவும் முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நடந்த அனைத்தையும் மறந்துவிட்டதாக அன்பு கணபதியிடம் அன்பாக பேசி அவரை ராஜதுரை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, போதை தலைக்கு ஏறிய நிலையில், மீண்டும் கள்ளக்காதல் விவகாரம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜதுரை, தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து அன்பு கணபதியின் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் ஓடிய அன்பு கணபதியை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, துரைப்பாக்கம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



