கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களின் 3 பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், கணவன் – மனைவி இருவரும் கேரளாவில் தனியாக வாழ்ந்து வந்தனர். முன்னதாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய சாம் ஜார்ஜ், பின்னர் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான படிப்பை மேற்கொண்டுள்ளார்.
இந்த சூழலில்தான், சாம் ஜார்ஜுக்கு வெளிநாட்டிலும், கேரளாவிலும் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சில பெண்களை அவர் தனது மனைவி கண் முன்னே வீட்டிற்கே அழைத்து வந்து தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தால் சாம் ஜார்ஜ் மற்றும் ஜெஸி சாம் இடையே அடிக்கடி தகராறுகள் வெடித்துள்ளன. இதன் காரணமாக, ஒரே வீட்டில் வசித்த போதிலும், இருவரும் கடந்த 15 ஆண்டுகளாகப் பிரிந்துதான் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் மகள் லிசா, கடந்த செப்.27-ஆம் தேதி தாய்க்குத் தொலைபேசியில் அழைத்துள்ளார். வழக்கமாக அழைப்பை எடுக்கும் தாய் ஜெஸி, அன்று நீண்ட நேரமாக அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த மகள் லிசா, கோட்டயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கணவன் – மனைவி இருவருமே இல்லை.
இதையடுத்து, காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில், கடந்த அக்.3-ஆம் தேதி, இடுக்கி மாவட்டம் செப்புக்குளம் அருகே உள்ள 50 அடி பள்ளத்தாக்கில் ஜெஸியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஜெஸியின் உடலில் பல காயங்களும், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களும் இருந்தன. சாம் ஜார்ஜ் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது செல்போன் சிக்னல் மைசூரில் இருப்பது கண்டறியப்பட்டது.
மைசூருக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கே பதுங்கியிருந்த சாம் ஜார்ஜை கைது செய்து கோட்டயம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தினார்.
சாம் ஜார்ஜ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்துவந்த ஈரான் நாட்டை சேர்ந்த 32 வயது மரியம் ஷிரின் என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலில் இருந்துள்ளார். இந்த விவகாரமும் ஜெஸிக்கு தெரிந்துள்ளது. அத்துடன், சாம் ஜார்ஜுக்கு இருந்த மற்ற பெண்களுடனான தொடர்பு குறித்துச் செப்.26-ஆம் தேதி இரவு கணவன் – மனைவிக்குள் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சாம் ஜார்ஜ் ஆத்திரத்தில் பெப்பர் ஸ்ப்ரேயை ஜெஸியின் முகத்தில் அடித்து, பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். மறுநாள், தனது ஈரானிய காதலி மரியம் ஷிரினின் உதவியுடன் ஜெஸியின் உடலை காரில் ஏற்றிச் செப்புக்குளம் பள்ளத்தாக்கில் வீசியுள்ளார்.
இந்த கொலை வழக்கில் சாம் ஜார்ஜை கைது செய்த போலீசார், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக வந்த காதலி மரியம் ஷிரினை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல பெண்களுடன் இருந்த தொடர்புகளை தட்டிக் கேட்ட மனைவியை, காதலியுடன் சேர்ந்து கணவரே கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.