கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2019-இல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மதுரை கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2020-ல் திருமணம் செய்ததாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பாட்டியைப் பார்ப்பதாக சொல்லிவிட்டுச் சென்ற அந்தப் பெண், குழந்தைகளுடன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, மனைவி சொந்த விருப்பத்தின் பேரிலேயே சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மனைவியின் தாய் வீட்டிற்குச் சென்று சிவக்குமார் விசாரித்தபோதுதான், அவரது மனைவிக்கு இது 5-வது அல்லது 6-வது திருமணமாக இருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது. விசாரணையில், அவர் 2013-ல் வெங்கடேசன் என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றதும், பின்னர் 2016-ல் கோவையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்து, சில மாதங்களில் அவர் இறந்ததும் உறுதியானது.
சுரேஷின் குழந்தையை அவரது தாயார் வளர்த்து வருகிறார். அதன்பின், செல்வராஜ் மற்றும் லிங்குசாமி ஆகியோருடன் தொடர்பில் இருந்ததையும், லிங்குசாமி மூலம் கர்ப்பமானதை கலைத்ததையும் சிவக்குமார் அறிந்தார். இந்தத் தகவல்களை மறைத்து, தனக்குத் திருமணம் ஆகவில்லை எனக் கூறி சிவக்குமாரைத் திருமணம் செய்துள்ள அந்தப் பெண், தற்போது வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 3.5 பவுன் தங்க நகைகளுடன் சென்றுவிட்டதாகவும், தற்போது ஆம்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை 6-வது முறையாகத் திருமணம் செய்துகொண்டதாகவும் சிவக்குமாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
குழந்தைகளை தனியே கவனிக்க முடியாமல் தவிக்கும் சிவக்குமார், தனது மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



