மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கட்பால் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்ஷன் (எ) ரவிராஜ் ரஞ்சித் ஜாதவ் (45). கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, மதன்வாடி பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு அடியில் கருப்புக் கம்பளியில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் தகவல்படி, சுதர்ஷன் தனது மனைவி தீபாளியை (30 வயது) இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, மனைவியின் கொலையை மறைப்பதற்காக, அவரது உடலைக் கருப்புக் கம்பளியில் சுற்றி, தனது ஸ்கூட்டரில் கொண்டு சென்று மதன்வாடி கிராமத்தின் மேம்பாலத்திற்குக் கீழே வீசிச் சென்றுள்ளார். சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவரது கையில் ‘ரவிராஜ்’ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் கண்டனர்.
உயிரிழந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் கையில் இருந்த டாட்டூவின் புகைப்படத்தை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு வழங்கி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி தனது மனைவி காணாமல் போனதாக பாரமதி காவல் நிலையத்தில் சுதர்ஷன் புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுதர்ஷனை அழைத்து விசாரித்தபோது, அது தனது மனைவி தீபாளிதான் என்பதை அவர் உறுதி செய்தார்.
இருப்பினும், அவரது பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். தீவிர விசாரணையின் முடிவில், சுதர்ஷன் தனது மனைவியைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார். சுதர்ஷன் அளித்த வாக்குமூலத்தின்படி, தனது மனைவி திருமணத்தை மீறி வேறொரு நபருடன் உறவில் இருப்பதாகச் சந்தேகமடைந்திருக்கிறார். இதனால், தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தைக்கு யார் தந்தை எனக் கேட்டு இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோபமடைந்த சுதர்ஷன், அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து தீபாளியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தீபாளி அங்கேயே உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து, உடலை கம்பளியில் சுருட்டி ஸ்கூட்டரில் வைத்து மேம்பாலத்தின் கீழ் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து சுதர்ஷனை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



