”பாமகவின் பொருளாளராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என திலகபாமா தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்மையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். மேலும், செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவராக நீடிப்பேன் என அன்புமணி தெரிவித்தார்.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ராமதாஸ் – அன்புமணியின் மோதலால் பாமகவுக்குள் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பாமகவின் பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி ராமதாஸ் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், பாமக பொதுக்குழுவில் என்னை தலைவராக முறைப்படி தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கிகரீக்கப்பட்டுள்ளது என்றும், நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் தனக்கே உரிமை இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான், திலகபாமா அளித்துள்ள பேட்டியில், “பாமகவின் பொருளாளராக நானே செயல்படுகிறேன். என்னை தலைவர் நியமித்திருக்கிறார். பாமகவில் நான் தொடர்ந்து செயல்படுவதற்கு எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராமதாஸ் – அன்புமணியின் மோதல் போக்கு காரணமாக பாமக நிர்வாகிகள் கடும் மன உளைச்சலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.