அங்காடித் தெரு படம் மூலம் அறியப்படுபவர் சிந்து. அப்படத்தில் படித்துரை பாண்டிக்கு மனைவி நடித்திருப்பார். பல முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த இவர், சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திடீரென புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி, அடையாளம் தெரியாத தோற்றத்திற்கு மாறிய அவர், உயிருக்கு போராடிக்கு கொண்டிருக்கிறார். இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த உருக்கமான பேட்டியில், ‘‘இப்போ வரை என் நண்பர்கள் தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமானால் அவர்களின் உதவியில் தான் சாப்பாடு, வீட்டு வாடகை எல்லாம் கொடுத்துட்டு இருக்கேன். பொதுமக்கள் நிறைய பேர், வெளியூரிலிருந்து உதவி செய்திருக்கிறார்கள்.

எனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கே தொலைத்தோமோ அங்கு தான் தேட வேண்டும் என்பதைப் போல, முதன் முதலில் எனக்கு மருத்துவம் பார்த்த துளசிராமன் என்பவரிடம் கேட்டேன், ‘எனக்கு விஷ ஊசி போட்டு சாகடிச்சிடுங்க, தினம் தினம் என்னால சாக முடியல’ என்று கெஞ்சினேன். அவரும் அதை கேட்டு அழுதுவிட்டார். நான் நாட்டு மருந்து கூட முயற்சித்தேன், பயனளிக்கவில்லை என்று அவரிடம் கூறினேன். ‘இப்போதைக்கு உங்களுக்கு எந்த மருந்தும் கேட்காது’ என்று அவர் கூறிவிட்டார். எனக்கு இருக்கும் புற்றுநோயை கரைக்கும் மிஷின், உலகத்திலேயே அமெரிக்கா, ஜப்பான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 4 இடங்களில் தான் இருக்கிறதாம். பெட்ஸ்கேன் எடுக்கும் இயந்திரம் மாதிரி அந்த இயந்திரத்தில் படுத்துவிட வேண்டுமாம்.
உடலில் எங்கெல்லாம் கேன்சர் இருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த மிஷின் கரைத்து எடுத்துவிடுமாம். இது மட்டும் தான் இப்போதைக்கு பண்ண முடியும் என்று துளசி சார் சொல்லிட்டார். செல்வாக்கு இருந்தால், பெங்களூருவில் இலவசமாக கூட அந்த சிகிச்சை செய்துவிடலாம் என்கிறார்கள். எனக்கு பெங்களூரு மொழியும் தெரியாது, ஆட்களையும் தெரியாது, நண்பர்களும் கிடையாது. ஒரு சிட்டிங் உட்கார்ந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஆகும் என்கிறார்கள். 25 சிட்டிங் ஆகுமாம். அவ்வளவு தொகை வேண்டும், நான் போய் அங்கு தங்க வேண்டும், அதற்கும் பணம் தேவை. இப்படி எதுவும் இல்லாமல், ஜீரோவாக உட்கார்ந்திருக்கிறேன்.
என் விரல்கள் இரவில் செயலிழந்து விடும். என்னால் சாமியை கூட வணங்க முடியாது. உடல் முழுவதும் வலியாக உள்ளது. கைகள் வீங்கியுள்ளது. ஏதாவது ஒரு இடத்தில் வலி இருந்தால் தாங்கிக் கொள்ளலாம். உடல் முழுக்க வலியாக இருக்கிறது. எங்கு வலி என்று நான் சொல்வது? உடம்பும் சரியில்ல, மனசும் சரியில்ல, பணமும் இல்ல, அப்படியே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. நேற்று இரவு கூட என் தம்பியிடம் கூறினேன், ‘தலையணை வைத்து அழுத்தி என்னை சாவடிச்சிடு, என்னால முடியல’ என்று. கதறி கதறி ஒவ்வொரு ராத்திரியும் அழுதுட்டு இருக்கேன்” என்று பேசியுள்ளார்.