காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி கட்சி வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியதாவது, பண்டிகை காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன.
அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர், பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளை காத்திடும் வகையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தில் கரும்பினை சேர்த்து வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் வாட்ச் அரசியல் குறித்த கேள்விக்கு ” நான் வாட்ச் கட்டவில்லை, என சிரித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் வேடிக்கையாக கையை தூக்கி காட்டினார் அன்புமணி ராமதாஸ். மேலும் இந்தியாவில் எல்லா கொரோனா தொற்றும் வந்து போய்விட்டது. தற்போது சைனாவில் வந்திருப்பது BF.7 வகை கொரோனா தொற்று தான், இந்த BF.7 வகை ஒமிக்ரான் கொரோனா தொற்று கடந்த ஜூலை மாதமே 98சதவிகித மக்களுக்கு வந்து போய் விட்டது, ஆகையால் நாம் சைனா போல் தற்போது பயப்பட தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.