சென்னை மடிப்பாக்கம் பகுதியை அடுத்த கீழ்க்கட்டளை, திருவள்ளுவர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா (57). இவர், தாம்பரம் மாநகராட்சி 18-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது மகன் கோபிநாத் (29). இவர், நேற்றிரவு செல்போன் பேசிவிட்டு வருவதாகக் கூறி மாடிக்குச் சென்றவர். நீண்ட நேரமாகியும் கீழே வராததால் மேலே சென்று பார்த்துள்ளனர். அப்போது கோபிநாத் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற மடிப்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கோபிநாத்-க்கு திருமணம் ஆகாத நிலையில், வீட்டில் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், “என் சாவுக்கு யாரும் காரணமில்லை, எனக்கு இந்த வாழ்க்கை புடிக்கல. லவ் யூ டாடி. மிஸ் யூ, சாரி” என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.