இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரம்ஜான் மாதம் நோன்பிருப்பது ஆகும். நோன்பின் இறுதி நாளில் ரம்ஜான் பண்டிகையை, குடும்பத்தார், உறவினர்கள் சூழ எளியோருக்கு கொடையை வழங்கி கொண்டாடும் திருநாளே ரம்ஜான் பண்டிகை. உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் பெரிய பண்டிகை ரம்ஜான். இப்பண்டிகையை அன்று பெருமளவு இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பெரிய மைதானங்களிலும், பள்ளி வாசல்களிலும், மசூதிகளிலும் சிறப்பு தொழுகையை மேற்கொள்வர்.
பொதுவாக ஷவ்வால் மாதம் வளர்பிறை நிலவின் பிறை தோன்றிய பின், அதை வைத்து ரம்ஜான் தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில், நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து, இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமான, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ரமலான் நோன்பு தொழுகை இரவில் தொடங்கியது. அத்துடன் அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க தொடங்கினர். ரமலான் மாதத்தின் பிறை பார்க்க வேண்டிய நாளான நேற்று பிறை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22.03.2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24.03.2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” என தலைமை காஜி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று முதல் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குகிறது.