பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேரணியில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சைஃபுல்லா கசூரி என்ற பயங்கரவாதி கலந்து கொண்டு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது.
இந்த பரபரப்பான சூழலில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தளபதி சைஃபுல்லா கசூரி என்ற காலித், பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்தியுள்ளார். இந்த பேரணியில், அந்நாட்டு அரசியல் கட்சியினர், பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனரும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தின் மகனுமான கசூரியுடன், தல்ஹா சயீத்தும் பேரணியில் பங்கேற்றுள்ளார்.
இந்த பேரணியில் பேசிய கசூரி என்கிற காலித், ஆபரேஷன் சிந்தூரின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை “தியாகிகள்” என்று புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நான் குற்றம் சாட்டப்பட்டேன். இப்போது என் பெயர் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது என்றும் பேசியுள்ளார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தளபதியாக சைஃபுல்லா கசூரி உள்ளார். அவர் அந்த பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார்.