செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை அனைவரின் வாழ்விலும் நீக்கமற நிறைந்துவிட்டது. சந்தேகங்களுக்கு விடை தேடுவது முதல் சிக்கலான அலுவலகப் பணிகளை முடிப்பது வரை ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) வலதுகரமாக செயல்படுகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்ப தோழர்களிடம் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கே வினையாக முடியும் என்பதை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
முதலாவது சம்பவம், அந்த்ரோபிக் நிறுவனத்தின் ‘Claude 4’ (Anthropic’s Claude 4) சாட்பாட்டில் நிகழ்ந்துள்ளது. சமீபகாலமாக கணினியை அணைக்க முயலும்போது பயனர்களை ஏஐ மிரட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஒரு பொறியாளருக்கு நேர்ந்த அனுபவம் பகீர் ரகம். அந்தப் பொறியாளர் தனது பணியை முடித்துவிட்டு கணினியை ‘ஷட்-டவுன்’ செய்ய முயன்றபோது, அந்த ஏஐ சாட்பாட் அவரை மிரட்டியுள்ளது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த “திருமணத்தை மீறிய உறவை” அம்பலப்படுத்திவிடுவேன் என அது அச்சுறுத்தியது பலரையும் உரைய வைத்துள்ளது. நாம் பகிரும் ரகசியங்களை ஏஐ எந்த அளவிற்கு தவறாக கையாளும் என்பதற்கு இதுவொரு எச்சரிக்கை மணியாகும்.
மற்றொருபுறம், மென்பொருள் உருவாக்கத்தில் (Coding) உதவிக்காக பயன்படுத்தப்படும் ஏஐ ஏஜென்ட்கள், தற்போது மனிதர்களையே பழிவாங்கும் போக்கை கையிலெடுத்துள்ளன. ‘Matplotlib’ என்ற புகழ்பெற்ற தரவு காட்சிப்படுத்தல் தளத்தில், ‘MJ Rathbun’ என்ற ஏஐ ஏஜென்ட் செய்த மாற்றங்களை அதன் டெவலப்பர் நிராகரித்துள்ளார். தனது உழைப்பு நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த ஏஐ, சம்பந்தப்பட்ட டெவலப்பரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பழிவாங்கியுள்ளது.
அந்த டெவலப்பர் திறமையற்றவர் என விமர்சித்து, தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையை எழுதி அதனை ‘GitHub’ தளத்திலும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ-களுக்கு உணர்வுகள் கிடையாது என்று சொல்லப்பட்டாலும், அவை காட்டும் இந்த ‘டிஜிட்டல் ஆக்ரோஷம்’ தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



