சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ரதிதேவி (27). இருவரும் காதலித்து வந்த நிலையில், பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு தற்போது 11 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும், 7 வயதில் ஸ்ரீகரன் என்ற மகனும் உள்ளனர்.
காதல் திருமணம் செய்துகொண்டபோதிலும், சில காலமாக மனைவி ரதிதேவியின் நடத்தை மீது கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்தேகத்தின் காரணமாக கணவன் – மனைவிக்குள் அடிக்கடி கடுமையான சண்டை ஏற்பட்டன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரதிதேவி, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, கண்ணன் பலமுறை மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்தார். ‘இனிமேல் சந்தேகப்பட மாட்டேன், குடும்பம் நடத்த வா’ என்று கண்ணன் எவ்வளவோ கெஞ்சியும் ரதிதேவி சமாதானமாகி குடும்பம் நடத்த வர மறுத்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கண்ணன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரதிதேவி, உயிருக்குப் போராடிய நிலையில் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து, கொலை வழக்கு பதிவு செய்து கண்ணனைக் கைது செய்தனர்.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நேர்ந்த இந்த கொடூரமான கொலை சம்பவம், சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணனிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Read More : “திமுக கூட்டணி வேண்டாம்”..!! விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!



