டெல்லி பாஜகதான் வீடுகளை இடிக்கிறது என்றால், இங்குள்ள எங்கள் கூட்டணி கட்சி திமுகவும் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி மாநிலம் நிஜாமுதீன் ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் 3 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என டெல்லியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் மதராஸி முகாமில் உள்ள கட்டங்களை இடித்துத் தள்ளுமாறு, பொதுப்பணித்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த 60 ஆண்டுகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி கேம்பில் இருந்த குடியிருப்புகளை, டெல்லி பாஜக அரசு இடித்து அகற்றியது. இதனால், பாதிக்கப்பட்ட தமிழர்கள் கைகளில் கிடைத்த பொருட்களோடும், கண்ணீருடன் வெளியேறினர்.
இந்நிலையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கக் கோரியும், மத்திய – மாநில அரசுகளின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளை கடன் சுமையில் இருந்து விடுவிக்கக் கோரியும் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அரசுகள் என்பது மக்களுக்கானதே தவிர, அரசுகளுக்காக மக்கள் அல்ல. டெல்லியில் ஆயிரம் வீடுகளை இடிக்கிறார்கள். கேள்வி கேட்க யாரும் இல்லை. பச்சை குழந்தைகள் கதறுகிறார்கள். சரி டெல்லியில் தான் அப்படி என்றால், தமிழ்நாட்டில் நான் கூட்டணியில் இருக்கும் திமுக அரசு வீடுகளை இடித்து தரைமட்டமாக்குகிறது. சென்னையில் கடலோர மக்களையும், ஆதிக்குடியினர் மக்களை, ஏழை மக்கள் குடியிருக்கும் எல்லா பகுதிகளையும் இடித்து தரைமட்டமாக்குகின்றனர். கேட்க யாரும் இல்ல.
அதையும் மீறி கேட்டால், உயர்நீதிமன்றம் கூறியதாக சொல்கிறார்கள். நான் நீதிபதிகளை பார்த்து கேட்கிறேன். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூட ஏரி, குளத்தில் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள்; பல அரசு வளாகங்கள், வணிக வளாகங்களும் நீர்நிலைகளில் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். அதையெல்லாம் இடிக்க வேண்டியதுதானே” என்று விளாசியுள்ளார்.