கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன..
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.. கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் முகவரி என்ற இடத்தில் 0 என்று போடப்பட்டுள்ளது எனவும், ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள் வசித்ததாகவும் கூறியிருந்தார்.. அதே போல் ஒரே பெயர் மற்றும் முகவரில் பல வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.. 80 வயது முதியவர் ஒருவர் புதிய வாக்காளராக சேர்க்கப்பட்டிருந்தார்.. வாக்காளரின் தந்தை பெயரில் ரேண்டமாக ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருந்தன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன் வைத்தார்..
இந்த நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று விளக்கமளித்தார்.. அப்போது ராகுல்காந்தி கூறியது தவறான தரவுகள் என்றும், அவர் தனது குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது “நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் சவால் விடுத்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து விமர்சித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் எக்ஸ் பதிவில் “ இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் – வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” என்று பதிவிட்டுள்ளார்..