ஜோதிட நம்பிக்கைகள் என்பது தமிழர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் செய்யப்படும் பரிகாரங்கள் இன்று பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. தோஷங்களை சீர்செய்யவும், நல்ல பயன்களை அதிகரிக்கவும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை, சீரமைக்கும் ஆன்மீக வழிகளாக பார்க்கப்படுகின்றன.
இந்த பரிகார முறைகள் பெரும்பாலும் நம்பிக்கையையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடமாக செயல்படும் ஜோதிடர் சண்முகத்தின் கூற்றுப்படி, தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பரிகார தலங்களுக்கு முக்கிய இடமாகத் திகழ்கின்றன.
கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசி விஸ்வநாதர், சக்கரபாணி மற்றும் ஆதி கும்பேஸ்வரர் கோயில்கள் போன்றவை, ஜாதக தோஷங்களைக் குறைக்கும் தெய்வீக மையங்களாக உள்ளன. பரிகாரங்கள் செய்யப்படுவது, ஒருவர் ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட தோஷங்களின் அடிப்படையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நாடி ஜோதிடத்தில், ஒருவரது பூர்வ ஜென்ம வினைகள், வாழ்க்கைத் தடைகள் போன்றவை ஓலைச்சுவடிகளில் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கும். அந்த ஓலையின் அடிப்படையில், அவருக்குத் தேவையான பரிகார ஸ்தலங்கள் மற்றும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்த பரிகாரங்களில், கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்வது, நிதியளவில் முடியாதவர்கள் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வது, குறிப்பிட்ட மந்திரங்களை தினசரி ஜபிப்பது, விரதம் இருப்பது போன்ற ஆன்மீக வழிகள் அடங்கும்.
முகமாக, திருமண தடை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு திருமணஞ்சேரி, திருவேல்விக்குடி போன்ற தேவஸ்தானங்கள் பரிகார தலங்களாகக் கூறப்படுகின்றன. வீடு வாங்குவதில் அல்லது வாகனம் போன்ற சொத்துகளை பெறுவதில் தடைகள் ஏற்படுவதற்கு, செவ்வாய் தோஷம் காரணமாக இருக்கலாம். இத்தகைய கிரக தோஷங்களுக்கு, ஜாதகத்தில் குறிப்பிட்ட பரிகாரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
“நாங்கள் பரிகாரங்களை பொதுவாக கூறுவதில்லை; நாடி ஓலையில் ஏற்கனவே எழுத்தாக இருப்பது போலவே கூறப்படும். அந்த பரிகாரங்களை அனுஷ்டிக்கும்போது தான் பலன் கிடைக்கும்” என்று சண்முகம் கூறுகிறார்.
Read More : விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையில் இருக்க வேண்டும்?. என்ன அர்த்தம் தெரியுமா?.



