அம்மன் மற்றும் சிவனுக்கு உரிய ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என சில நாட்கள் விஷேஷமானதாக பார்க்கப்படுகின்றன. அதில், ஆடி செவ்வாய் முக்கியமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சிவன், அம்மன் ஆகியோரை வழிபடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் பெண்கள் விரதம் இருந்து வழிப்பட சிறந்த நாளாக திகழ்கிறது.
ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்களும், கஷ்டங்களும் விலகும். ஜாதக கட்டத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், இப்படி எந்த தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷத்தினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த பூஜை செய்து, அம்பாளை வழிபடுவது மிக மிக நல்லது. இது கொரோனா காலமாக இருப்பதால் ஆடி செவ்வாய்க்கிழமை அம்பாளை நினைத்து வீட்டில் இருந்தபடியே சுலபமான முறையில் எளிமையாக பூஜை செய்தாலே பலன் கிடைக்கும்.
இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நல்லதாக உள்ளது.
ஆடி செவ்வாய் விரதத்தில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் என்றாலும் முழு தினமும் உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம். உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை நீங்கள்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அம்மனுக்கு படையல் வைப்பது எப்படி? மாலை அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இப்படி உங்களால் எது செய்ய முடியுமோ அதில் ஒன்று செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குறிப்பாக உங்களுடைய வீட்டின் காமாட்சியம்மன் தீபம் இருந்தால் அதை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு நிவேதனம் படைத்து விடுங்கள். தீபத்திற்கு அருகில் ஒரு சிறிய வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். அதில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். அதனை வீட்டின் அருகில் உள்ள 11 சுமங்கலி பெண்களுக்கு உங்கள் கையால் கொடுக்க வேண்டும்.
ஆடி செவ்வாயில் அம்மனுக்கு செவ்வரளி, செண்பகம் போன்ற சிவப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்துவது சிறப்பு. இந்நாளில் விரதம் இருந்து வழிப்பட்டால் கடன் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும். சுமங்கலி பெண்கள், மஞ்சள் பூசி நீராடி வழிபட்டால் கணவரின் ஆயுள் நீடிக்கும் என்றும் கன்னிப்பெண்கள் வழிப்பட்டால், நல்ல வரன் அமையும்.
குழந்தை வரம் கிடைக்க வழிபாடு : திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் திருமணம் நடக்க வேண்டும் என்று இந்த பூஜையை செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியத்தை வேண்டி இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதன் பின்பு சாப்பிடாமல் இருப்பவர்கள் அம்மனின் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.