கோடை காலத்தில் பல வீடுகளில் எலுமிச்சை பழம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஜூஸ் முதல் ஊறுகாய் போடுவது வரை பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், தற்போது பலரும் தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வரும் நிலையில், அதில் நிச்சயம் எழுமிச்சை மரமும் இடம்பெற்றுள்ளது. எலுமிச்சையை கடைகளில் வாங்குவதை தவிர்த்துவிட்டு, வீட்டு தோட்டங்களிலேயே எலுமிச்சையை வளர்த்து வருகின்றனர்.
இந்த பருவத்தில் கூட நீங்கள் ஒரு எலுமிச்சை மரத்தை நடலாம். இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பம் காரணமாக, மரத்தின் பழங்கள் பழுக்க வைப்பதற்கு முன்பே காய்ந்து கீழே விழுந்துவிடும். இது இயல்பான ஒரு பிரச்சனை தான். ஆனால், இந்த நேரத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை சரிசெய்யலாம்.
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கடுமையான வெப்பக் காற்று காரணமான மரங்களின் வேர்கள் பாதிக்கிறது. இது மரங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால் தான், பழங்கள் மற்றும் பூக்கள் உதிர்ந்து கீழே விழுகின்றன. இதனை தவிர்க்க தினமும் மாலை நேரமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பகலில் எலுமிச்சை மரத்திற்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. ஏனென்றால், வேர்களுக்கு அருகில் உள்ள தண்ணீர் பகல் நேரத்தில் வெப்பமடைந்து வேரை சேதப்படுத்தும்.
மேலும், எலுமிச்சை மரங்களுக்கு மோர் ஒரு இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம். மோர் மற்றும் படிகாரம் எலுமிச்சை மரங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை தாவரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும், வெப்பத்திலும் தாவரங்களுக்கு தேவையான குளிர்ச்சியை அளிக்கிறது.
மோரை தண்ணீரில் கலந்து எலுமிச்சை மரத்தைச் சுற்றியுள்ள ஊற்றிவிடலாம் அல்லது இலைகளின் மீது தெளித்து விடலாம். எலுமிச்சை மரங்களில் மோர் தெளிப்பது கோடை வெப்பத்தால் ஏற்படும் சேதத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், படிகாரம் அல்லது படிகாரப் பொடியையும் பயன்படுத்தலாம். முதலில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கப் மோர் மற்றும் ஒரு டீஸ்பூன் படிகாரப் பொடியை அதில் போட்டு நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர், மரத்தின் வேர்களுக்கு அருகில் உள்ள மண்ணைத் தோண்டி, இந்த கரைசலை ஊற்றிவிட வேண்டும். இந்த கரைசலை மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இதனால் எலுமிச்சை மரத்தில் அதிகளவில் காய்கள் காய்க்கும்.