திருமணத்திற்கு முன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு, பின்னர் அந்த உறவு முறிந்தால், அதை ‘திருமணம் செய்வதாக ஏமாற்றுதல்’ என்று கூறி கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான ஏமாற்றத்தை குற்றவியல் நடவடிக்கையாக மாற்றுவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என்றும் நீதிபதி புகழேந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன..?
திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பட்டதாரிப் பெண், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டி, பிரதீப்கண்ணன் என்ற இளைஞர் மீது திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பிரதீப்கண்ணன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “திருமணத்திற்கான வாய்ப்பு இருக்கும் ஒவ்வொரு சம்மத உறவும், அந்த உறவு முறிந்தவுடன், ‘திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறி ஏமாற்றிவிட்டார்’ எனக் குற்றவியல் வழக்காக மாற்றுவது சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம்.
இந்த வழக்கில் இருவருக்கும் இடையிலான உறவு 2020 முதல் 2025 வரை பல ஆண்டுகள் நீடித்தது என்பதை ஆவணங்கள் தெளிவாக காட்டுகின்றன. புகார் அளித்த பெண் ஒரு பட்டதாரி மற்றும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றவர் என்பதால், அவர் தனது செயலின் விளைவுகளை நன்கு அறிவார். மேலும், மனுதாரருக்கு மோசடி செய்யவோ அல்லது தீங்கிழைக்கவோ நோக்கம் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நீதிமன்றங்கள் ஒழுக்கத்தை அல்ல, சட்டப்பூர்வத்தையே கையாள்கின்றன. வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்பட்டால் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. இருவருக்குமான உறவு இயல்பாகவே சம்மதத்துடன் இருந்தது. உறவு முறிந்த பின்னரே தகராறுகள் எழுந்துள்ளன. எனவே, ‘திருமணம் செய்வதாக ஏமாற்றுதல்’ தொடர்பான BNS-இன் பிரிவு 69 அல்லது குற்றவியல் மிரட்டல் தொடர்பான பிரிவு 351(2) இன் தண்டனை விதிகள் இந்த வழக்கில் பொருந்தாது.
சமகால சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் வரையறைகள் மாறி வருவதை நீதிமன்றம் ஒப்புக்கொள்வதாக நீதிபதி குறிப்பிட்டார். உணர்ச்சிப் பற்றுதலுக்கும் உடல் உறவுக்கும் இடையிலான கோடு பெரும்பாலும் தெளிவற்றதாக இருக்கும் நிலையில், தனிப்பட்ட ஏமாற்றத்தை அல்லது முரண்பாட்டை குற்றவியல் தவறான நடத்தை என்று சித்தரிக்கக் கூடாது. தனிப்பட்ட உறவுத் தகராறுகளில் குற்றவியல் செயல்முறையைத் தூண்டும் வளர்ந்து வரும் போக்கை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
இதையடுத்து, மனுதாரருக்கு எதிராக வழக்குத் தொடருவது சட்ட செயல்முறையைத் துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என்று கருதிய நீதிமன்றம், திண்டுக்கல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
Read More : உங்கள் வாஷிங் மெஷின் லைஃப் டைம் உழைக்கணுமா..? அப்படினா இந்த 4 விஷயத்தை எப்போதும் மறந்துறாதீங்க..!!



