இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை அன்று சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுபவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
அமெரிக்கச் சட்டங்களை மீறுவது அல்லது கைது செய்யப்படுவது மாணவர் விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும், நாடு கடத்தப்பட நேரிடும் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு சர்வதேச மாணவர்கள் தகுதியற்றவர்களாக மாற்றிவிடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “அமெரிக்கச் சட்டங்களை மீறுவது உங்கள் மாணவர் விசாவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் சட்டங்களை மீறினாலோ, உங்கள் விசா ரத்து செய்யப்படலாம், நீங்கள் நாடு கடத்தப்படலாம், மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கு நீங்கள் தகுதியற்றவராக ஆகலாம்.. அமெரிக்க விசா என்பது ஒரு சிறப்புரிமை, அது ஒரு உரிமை அல்ல..” என்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், H-1B மற்றும் H-4 பணி விசாக்களை நாடுபவர்களுக்குத் தூதரகம் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்கக் குடிவரவுச் சட்டங்களை மீறுவது குறிப்பிடத்தக்க குற்றவியல் தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான தொடர்ச்சியான ஒடுக்குமுறை மற்றும் H-1B மற்றும் மாணவர் விசா செயல்முறைகளை கடுமையாக்கி வரும் சூழ்நிலையில் இந்த சமீபத்திய எச்சரிக்கை வந்துள்ளது.
விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையில் அமெரிக்காவிற்கு வரும் மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது. ஆகஸ்ட் 2024 தரவுகளின்படி, அமெரிக்காவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு 19% சரிவு காணப்பட்டது. இது 2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். இந்தச் சரிவுக்கு இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததே முக்கியக் காரணமாகும்.
இதனிடையே, திறமையான சர்வதேசத் தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற அனுமதிக்கும் H-1B விசா விண்ணப்பதாரர்கள், முன்னெப்போதும் இல்லாத காத்திருப்புக் காலங்களை எதிர்கொள்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரகங்களில் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட பல விசா சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டன அல்லது பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 2-ம் தேதி இதுகுறித்து அமெரிக்க தூதகர்கம் பதிவிட்டிருந்தது.. சட்டவிரோதக் குடியேற்றத்தை பயனற்ற பயணம் என்று குறிப்பிட்ட தூதரகம், சட்டவிரோதக் குடியேறிகள் வன்முறைக் கும்பல்கள், மனிதக் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகளின் இலக்காகிறார்கள் என்று தெரிவித்திருந்தது. மேலும் “சட்டவிரோதக் குடியேறிகள் சுரண்டப்பட்டு, இறுதியில் பயனற்றதாக நிரூபிக்கப்படும் ஒரு பயணத்தில் பாதிக்கப்பட்டவர்களாகிறார்கள். சட்டவிரோதக் குடியேற்றத்தால் பயனடைபவர்கள் கடத்தல்காரர்கள் மட்டுமே,” என்று தெரிவித்திருந்தது..
Read More : நாட்டின் அனைத்து ஏழைகளுக்கும் ரூ.46,000 பணம் வழங்கும் மத்திய அரசு? தீயாக பரவும் தகவல்..! உண்மை என்ன?



