சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் 42 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண். இவர், சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஓராண்டுக்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தோம். திடீரென ஒருநாள் என் மீது சந்தேகம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் நீ யாரிடமும் பேசக்கூடாது என்றும் என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிறகு ஆபாச வீடியோக்களை எனக்கு அனுப்பி வைத்து, இதேபோல் நாமும் இருக்க வேண்டும் என்று கூறினார். அப்படி இல்லையென்றால், உனது மகளின் படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினார். இதனால் கோபியின் நம்பரை பிளாக் செய்துவிட்டேன். இன்ஸ்டா பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டு புதிய ஃபோன் நம்பரை வாங்கி பயன்படுத்தி வந்தேன்.
பிறகு கோபி, தனது அக்காவின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து, அவர் மூலம் என்னை தொடர்பு கொண்டு மிரட்டினார். நீ என்னிடம் பழகி வந்ததை கணவரிடம் தெரிவிப்பேன் என்று மிரட்டுகிறார். மீண்டும் தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி டார்ச்சர் செய்து வருகிறார். எனவே ,கோபியை கைது செய்ய வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விசாரணையில், கோபியின் செல்போன் நம்பரை வைத்து தூத்துக்குடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விட்டார். தற்போது, தேங்காய் குடோனில் வேலை பார்த்து வருகிறார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து, தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கோபி, வெவ்வேறு பெயரில் 5 முகநூல் பக்கங்களும், 9 இன்ஸ்டாகிராம் கணக்குகளும் தொடங்கி, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கோபியை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.