சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து செம்மண் முறைகேடு மூலம் பெற்ற தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதி ஓம். பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். எனினும் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
Read More : ஈரான் – இஸ்ரேல் போர்.. தமிழர்களை காக்க முதலமைச்சர் உத்தரவு.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு..