பெங்களூருவின் யஷ்வந்தபுரா பகுதியில், திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் உறவினர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, யஷ்வந்தபுராவில் உள்ள முத்யாலம்மா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மராஜூ (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்தார். பக்கத்து வீட்டார் என்ற முறையில் ஏற்பட்ட சாதாரண பழக்கம், நாளடைவில் நெருக்கமான கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில், நரசிம்மராஜூ அந்தப் பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 22-ஆம் தேதி, அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அவரது குடும்பத்தினர், நரசிம்மராஜூவின் வீட்டை கண்காணித்துள்ளனர். இருவரும் வீட்டுக்குள் இருந்தபோது, உறவினர்கள் வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு நரசிம்மராஜூ கதவைத் திறந்தபோது, இருவரும் கையும் களவுமாகச் சிக்கினர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பெண்ணின் உறவினர்கள், நரசிம்மராஜூவை தனியாக வெளியே அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நரசிம்மராஜூ பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் தாக்கும் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து யஷ்வந்தபுரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, நரசிம்மராஜூவைத் தாக்கி அவரது உயிரிழப்புக்குக் காரணமான உறவினர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞர், உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



