முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கூலான தலைமைக்காக மட்டுமல்லாமல், தனது நகைச்சுவையான பேச்சுகளாலும் ரசிகர்களை வியக்க வைக்கிறார். சமீபத்தில், திருமண விழா ஒன்றில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரசிகர்கள் அவரை “கேப்டன் கூல் இப்போது ஹஸ்பண்ட் ஸ்கூல்” என்று அழைக்கும் அளவுக்கு குடும்ப வாழ்க்கை, கணவன் – மனைவி குறித்து நகைச்சுவையாக பேசி அனைவரையும் ஈர்த்துள்ளார்.
திருமண விழாவில் இருந்து அவர் கிளம்பவும், அங்கிருந்த கூட்டம் “தோனி! தோனி!” என ஆரவாரத்தில் கத்தியது. இதன்மூலம், மைதானம் மட்டுமின்றி, திருமண வாழ்க்கையிலும் ‘தல’ தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார். இவ்வாறாக, எங்கு சென்றாலும் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் நேர்த்தியான அணுகுமுறையின் மூலம் அனைவரையும் வசீகரிக்கும் தோனி, வாழ்க்கையின் வெவ்வேறு மேடைகளிலும் தனது கூலான பாணியில் பேசிவருகிறார்.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சனிக்கிழமை சென்னையில் மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைகள் குழுமத்தின் 10 கண் மருத்துவமனைகள்/பார்வை மையங்களைத் திறந்து வைத்தார். பல பார்வை கோளாறுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த விழாவில் பேசிய தோனி, “அனைவரும் ரெகுலராக ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டும். எனக்கு 44 வயதாகிறது. விளையாட்டு வீரராக இருந்தாலும் எனக்கு ஊசி மீது பயம் உண்டு. நானும் ஹெல்த் செக்கப் செய்துகொள்ள வேண்டும்.
முந்தைய தலைமுறையினரிடம் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. உணவு முறை நன்றாக இருந்தது. உடலில் எதாவது அசௌகரியம் தோன்றினால் உடனடியாகப் பரிசோதனை செய்யுங்கள். இப்போது மருத்துவத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. எளிதில் நோய்களைக் குணப்படுத்த முடியும். ‘Health is Wealth’ என்பதை கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது. உங்களுடைய பேரக் குழந்தைகளோடு நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் உடல் நலனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் மகிழ்ச்சி” என்றார்.