இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நான் முடிவு செய்யவில்லை என்று வர்ணனையாளரின் கேள்விக்கு தல தோனி கூலாக பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஐபிஎல் 16 சீசனின் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதனிடையே, இப்போட்டிக்கான டாஸ் கேட்பதற்கு மைதானத்துக்கு வந்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனிக்கு ஸ்டேடியம் முழுவதும் மஞ்சள் நிறம் பெரும் வரவேற்பை அளித்ததுடன், ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். அப்போது பேசிய தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல் போட்டி என கூறப்படும் நிலையில், ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூலாக பதிலளித்த தோனி, ”இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நான் முடிவு செய்யவில்லை” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனையடுத்து ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், தோனி மீண்டும் வருவார் என்றும், அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார்’ என்றும் கூறினார். தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், எம்.எஸ்.தோனியின் இந்த பதிலால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். லக்னோ – சென்னை அணிக்கிடையேயான 45 வது லீக் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.