சென்னையில் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கணவரின் வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு ஞானபிரகாஷ் (68) என்பவர் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளார்.
“உன் பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன், என்னுடன் லாட்ஜுக்கு வந்து தங்கு” என்று ஆபாசமாக பேசிய அந்த முதியவர், அப்பெண்ணை சங்கீதா ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த நபர் தவறான நோக்கத்தில் அழைப்பதை உணர்ந்த இளம்பெண், சாதுர்யமாக செயல்பட்டுத் தனது உறவினர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் மட்டும் தனியாக வந்ததாக நினைத்து, “உனக்கு என்ன வேண்டும்?” என்று ரொமான்டிக் பார்வையில் குஷியாக பேசிய முதியவரை, மறைந்திருந்த உறவினர்கள் சுற்றி வளைத்துச் சரமாரியாகத் தாக்கினர்.
ஹோட்டலில் நடந்த இந்த தாக்குதலில் நிலைகுலைந்த முதியவரை உறவினர்கள் செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், வழக்கறிஞர் என்று பொய் கூறி ஏமாற்றியதும் அம்பலமானது. ஒரு பெண்ணின் குடும்பப் பிரச்சனையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதற்காக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



