கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரமேஷன் (48). இவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த வியாழன் அன்று சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரமேஷன் வீட்டில் தீ எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரமேஷன், அவர் மனைவி சுலஜா குமாரி (46), மகள் ரேஷ்மா (23) ஆகிய மூவரும் தீயில் கருகி சடலமாக கிடந்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் சடலங்களையும் கைப்பற்றி, விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், ரமேஷனுக்கு பெரும் கடன் இருந்ததாகவும், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால் குடும்பம் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொண்டதும் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.