கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் குறித்து பல்வேறு ஐயங்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவின. குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக்கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 60,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இந்த அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தடுப்பூசி விநியோகம் தொடங்கிய பிறகு, ஸ்வீடன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் சற்று குறைந்திருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய பலரும், தடுப்பூசிதான் இதற்குக் காரணம் என்று விவாதிக்க தொடங்கினர். இந்தச் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு, ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 60,000 பெண்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். 2021 முதல் 2024 வரையிலான இவர்களின் மருத்துவ தரவுகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன..?
‘கம்யூனிக்கேஷன் மெடிசின்’ (Communication Medicine) என்ற புகழ்பெற்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொரோனாவுக்காக வழங்கப்பட்ட mRNA தடுப்பூசிகள் கருத்தரித்தல் விகிதத்திலோ அல்லது பிரசவத்திலோ எந்தவித எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்கள் மற்றும் செலுத்திக்கொள்ளாத பெண்கள் என இரு தரப்பினரிடையேயும் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
குழந்தைக்காக காத்திருக்கும் பெண்கள் அல்லது கருவுற்றிருக்கும் பெண்கள் தடுப்பூசி குறித்து குழப்பமடைய தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். “தடுப்பூசிகள் கடுமையான வைரஸ் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, கருவுறுதல் திறன் பாதிக்கப்படும் என்ற அச்சமின்றி தகுதியுள்ள பெண்கள் தாராளமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற செய்திகளை நம்பி ஆரோக்கியமான முடிவுகளை தள்ளிப்போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Read More : தமிழ்நாட்டில் சிக்கிய மெகா பாலியல் கும்பல்..!! ரெய்டில் சிக்கிய ஐடி இளம்பெண்கள்..? ஆடிப்போன காவல்துறை..!!



