வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை. இந்த மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்பட உள்ளது.. இந்த மாதம் 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்கள் தயாராகி வருகின்றன. வாரத்திற்கு 5 வேலை நாட்கள் மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, மாதத்தின் 2-வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். மீதமுள்ள சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவித்து, 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வங்கி சங்கங்கள் ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றன. ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை நாள் என்ற நிலையில், இந்த மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகள் இயங்காது. 27ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறுவதால், வங்கிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பில் மொத்தம் ஒன்பது முக்கிய வங்கிகள் உள்ளன. அரசு வங்கிகளுடன், தனியார் வங்கி ஊழியர்களும் இதில் அடங்குவர். இதனால், ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
மார்ச் 2024-ல், மாதத்தின் மீதமுள்ள இரண்டு சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிப்பது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் UFBU இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் காரணமாக, வங்கி ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிப்பது என ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதலாக 40 நிமிடங்கள் வேலை செய்ய ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதை அமல்படுத்த ரிசர்வ் வங்கியும் தயாராக இருந்தபோதிலும், சில காரணங்களால் அது பின்னர் தாமதமானது. இந்த நிலையில், இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தக் கோரி வங்கி ஊழியர்கள் பலமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அவர்கள் இப்போது மீண்டும் ஒருமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
Read More : மக்களின் பாக்கெட்டுகளை காலி செய்யும் வென்டிலேட்டர் மாஃபியாவிற்கு ஆப்பு..! மத்திய அரசின் புதிய விதிகள்..!



