சனி தோஷம் நீங்கச் செய்யும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பல தடை, தாமதங்கள், நஷ்டங்கள், நோய் போன்றவற்றை எதிர்கொள்வது வழக்கம். இதற்கான பரிகாரமாக, சில சிறப்புப் புனிதத் தலங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும் என ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில், சனி தோஷம் நீங்கச் செய்யும் முக்கிய கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருநள்ளாறு சென்று வந்தால் சனி பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் மறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை சந்தித்த நள மகராஜாவே தனது சனி தோஷம் நீங்க இங்குதான் வந்து வழிபட்டதாக புராண கதைகள் சொல்கின்றன.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நள தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் சனி கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அந்த நாளில் திருநள்ளாறு கோயில் சென்று வழிபாடு செய்துவர ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்படக் கூடிய தடை,தாமதங்கள் விலகும்.
இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோயிலில் அம்மன் சன்னதிக்குச் சென்ற பின்பு தான் சனீஸ்வரர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். சிலர் எடுத்ததும் சனீஸ்வரன் சன்னிதிக்குச் செல்வார்கள். அப்படி சென்று வழிபடுவது முறையான வழிபாடு கிடையாது. இங்கு இருக்கின்ற இறைவனைப் பார்த்த பிறகு, சனி பகவானைச் சென்று வழிபட்டால்தான் சனிதோஷம் முற்றிலும் நீங்கப் பெறுவீர்கள்.
Read more: கன்னடம் மட்டுமல்ல தெலுங்கும் தமிழில் இருந்து தான் வந்தது.. ஆதாரத்துடன் சொன்ன அப்பாவு..!!